October 20, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் 11 நாட்களுக்கு முன் காணமல் போன சிறுமி ஷெரினை கண்டுபிடிக்க, ஆளில்லா விமானங்களை காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி, தனது 4 வயது மகள் மற்றும் 3 வயது வளர்ப்பு மகளான ஷெரினுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதி, சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். அதனால் அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஷெரினை தண்டிக்க நினைத்த அவர், அதிகாலை 3 மணி அளவில், அந்த சிறுமியை வீட்டுக்கு வெளியே உள்ள நடைபாதையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு ஷெரின் காணாமல் போய்விட்டாள்.
இது குறித்து ஷெரினின் தந்தை, ரிச்சர்ட்சன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவருடைய புகரை ஏற்றுக்கொண்ட அவர்கள், அந்த ஷெரினை பல இடங்களில் தேடினர். ஆனால்,அவளுக்கு என்ன ஆனது என்றோ எங்கு சென்றாள் என்றோ தெரியவில்லை. இந்நிலையில், ஷெரினை தேடும் பணியில் ஆளில்லா விமானத்தை காவல்துறையினர் பயன்படுத்தி தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கெவின் பெர்லிச் கூறுகையில், “அவளை உயிருடன் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், நேரம்தான் எங்கள் எதிரியாக உள்ளது. அவளை விரைவில் கண்டுபிடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
அதே நேரத்தில், சிறுமிஷெரின் காணாமல்போன சம்பவத்தில், அவளுடைய தந்தை வெஸ்லி மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கைது செய்தனர். ஆனால், வெஸ்லி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெஸ்லியை காவல்துறையினர் கைது செய்தபிறகு, டெக்சாஸ் மாகாணத்தின் குழந்தை பாதுகாப்பு சேவை, அவருடைய 4 வயது மகளை, தங்களுடைய பாதுகாப்பில் வைத்துள்ளது.
சிறுமி ஷெரின் காணமல் போய் 11 நாட்கள் ஆகியும், அவளை குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் ரிச்சர்ட்சன் நகர் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.