January 28, 2019
தண்டோரா குழு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகியே முதல்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டல் நகர் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி ”
ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பா.ஜ.க. இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.