May 22, 2019 தண்டோரா குழு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கட்டப்படும் மேம்பாலங்களால் சிக்கித்தவிக்கும் அவசர ஊர்தி மற்றும் பொதுமக்கள் , மாற்றுப்பாதையில் போக்குவரத்து மாற்றப்படுமா என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரத்தில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், ஊட்டி செல்பவர்கள் கவுண்டம்பாளையம் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து பெரிய நாயக்கன் பாளையம் வரை தொழிற்சாலைகள், பள்ளி , கல்லூரிகள், அரசு ஐ டி ஐ, ஹோமியோபதி கல்லூரி , மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் ஏராளம் இருக்கின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், படிக்கும் குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் மாணவர்கள் என ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கவுண்டம்பாளையம், மற்றும் கவுண்டர் மில் பகுதியில் புதியதாக மேம்பாலம் கட்ட அரசு பணிகளை செய்து வருகிறது. மேம்பால பணிகள் நடைபெறுவதால் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரைமணி முதல் முக்கால்மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலில் அவசர ஊர்தி மாட்டிக்கொண்டு போராடி செல்ல வேண்டியதால், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஒரு சில இறப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மாவட்ட காவல் துறை , உடனடி நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் சாலையை , துடியலூர் வரை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது இரு வழிப்பாதையாக இருப்பதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கவுண்டம்பாளையம் பகுதியில் தோண்டப்படும் குழிகளால், மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிகளால், கீழே விழும் அபாயம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் விடுமுறை முடிந்து வந்தால் இப்பகுதியில் , கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்கோடை விடு முறைக்கு ஊட்டி செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மாற்றுப்பாதையில் துடியலூரை தாண்டி பயன்படுத்த உடனடியாக பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்து அமுல்படுத்த வேண்டும் என்பதே இச்சாலையை பயன்படுத்தும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.