September 25, 2019 தண்டோரா குழு
கருமத்தம்பட்டி பகுதியில் சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள் தனியார் கட்டிடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தனியார் கட்டடத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் செங்கப் பள்ளியில் இருந்து கேரள எல்லையான வாளையாறு வரை 850 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த ஆறு வழிச்சாலை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த ஆறு வழிச்சாலை செல்லும் பகுதியில் முக்கிய ஊர்களின் சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது. இந்த கட்டண சாலைக்கு செங்கப்பள்ளி மற்றும் கோவை மாவட்டம் கணியூரிலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆறு வழிச் சாலையில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவிலான தனியார் சொகுசு பேருந்துகள்,சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகிறது தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் இந்த ஆறு வழிச்சாலை அடங்கியுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் வருகின்றன.
இந்நிலையில் பாலத்தின் அகலம் 60 மீட்டர்க்கு பதிலாக 40 மீட்டராக குறைக்கப்பட்டதால் சர்வீஸ் சாலையும் குறுகி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதுவரை ஏற்பட்ட விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதால் உடனடியாக சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரி அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக குறைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் அகலத்தை நீட்டிக்க கோரி அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இன்று தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நேற்று இரவு கருமத்தம்பட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து இன்று காலை முதல் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்றும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர் எனினும் தங்கள் போராட்டத்தை தங்கள் அலுவலகத்திற்குள்ளேயே நடத்துவதாக கூறி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
குறைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும் இதனால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலை குறித்து மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் தற்போது இந்த ஆறு வழிச் சாலையில் கருமத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் விரிசல் ஏற்பட்டு இதனை சரி செய்யும் பணியில் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.