November 7, 2018 தண்டோரா குழு
சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியில் காற்றுமாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று ஏற்படும் மாசு அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக பட்டாசு வெடிப்பதில் உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அந்த கட்டுப்பாடு பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. தற்போது அதன் விளைவாக
ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைந்துள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருவிகளை வைத்து கண்காணிக்கப்பட்டது. அதன்படி சென்னை நகரில் சவுகார்பேட்டையில் தீபாவளியன்று காற்றுமாசு அளவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம். என்ற அளவில் காற்றுமாசு இருந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நாளில் சவுகார்பேட்டையில் காற்றுமாசு 777 பி.பி.எம். ஆக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காற்றுமாசு அளவு 100 பி.பி.எம். ஆகும். அதைபோல் வேளச்சேரியில் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. தீபாவளியின்போது தி.நகரில் அதிகளவு ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தீபாவளியன்று காற்று மாசு குறியீடு சென்னையில் 65 புள்ளிகளாகவும், பெங்களூருவில் 87 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.