June 14, 2019 தண்டோரா குழு
விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரில் கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்றாம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ 32 ரக போர் விமானம் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலப்பிரதேசம் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய விமானப்படை வீரர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. தற்போது அந்த 13 பேரின் புகைப்படங்கள் இந்திய விமானப் படையினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்ற ஒருவரும் இடம் பெற்றுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட வினோத் ஹரிஹரன் கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடர் ஆக பணியாற்றி வரும் அவர் கேரளாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த புயல் வெள்ளத்தின் போது இந்திய விமான படை சார்பில் நடைபெற்ற மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர் எனவும் இந்திய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டு 10 நாட்களுக்கும் மேலாகி இருப்பதால் உடல் பாகங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றைக் கொண்டு உடல்கள் அடையாளம் காணப்படும் எனவும் அவை இன்றோ அல்லது நாளையோ அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.