• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிகம் செலவழிக்க வேண்டும் – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

April 10, 2026 தண்டோரா குழு

ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிக நிதியை ஒதுக்கி செலவழிக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.
அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 2025-26 ஆம் கல்வி ஆண்டின் கல்வி உதவித்தொகை (பகுதி இரண்டு) வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோஸ்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன் ஜி மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 278, மாணவிகள் 578 பேர் என மொத்தம் 856 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு கல்வியைத் தருகிறோம். உதவித்தொகை என்பது கல்விக்காகத்தான். அதுதான் நிரந்தர செல்வம். இதை மக்களும், அரசும் அறிந்துகொள்ள வேண்டும்.
இப்போது தேர்தல் நேரம் என்பதால் பிரசார கூட்டங்களில் நான் வந்தால் கல்வியைக் கொடுப்பேன் என்று சொல்கிற கட்சியோ, வேட்பாளரோ யாருமில்லை. கல்வி நிரந்தர செல்வம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் இன்றைய நிகழ்வில் மட்டும் 856 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்தை உதவித்தொகையை வழங்குகிறோம். கடந்த 2012 முதல் இதுவரை 11,171 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.25 கோடி உதவித்தொகை வழங்கி உள்ளோம்.
கல்வியில் வளர்ந்த நாடுகளோடு போட்டி போட்டு நாம் வரவேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்காவோடும் சீனாவோடும் எல்லாம் போட்டி போட வேண்டும்.

மொத்த உற்பத்தியில் உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் தனி நபர் வருமானம் ஈட்டுவதில் உலகளவில் இந்தியா 140-வது இடத்தில் உள்ளது. தனி நபர் வருமானத்தில் ஜப்பான் 30000 டாலர்களும், இந்தியா வெறும் 3,000 டாலர்களை மட்டுமே ஈட்டி வருகிறது. இதை மாற்றி அமைக்க கூடிய வாய்ப்பு கல்விக்குத்தான் உண்டு.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியா 28 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழகம் 50 சதவீதத்துடன் முதல் மாநிலமாக உள்ளது. சீனா 70 சதவீதத்துக்கு மேல் போய்விட்டது. வளர்ந்த நாடுகள் 60 முதல் 100 சதவீதம் வரை வந்துவிட்டது.
இந்நிலைக்கு வளர்ந்த நாடுகளில் அரசுகள் அதிகம் கல்விக்கு செலவு அளிப்பது தான் காரணமாகும். இந்தியாவில் அரசு குறைவாக செலவழிக்கிறது. பெற்றோர்கள் தான் அதிகம் கல்விக்கு செலவழிக்கின்றனர்.

உயர்கல்விக்கு வந்தால் 75 முதல் 80 சதவீத மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தான் படிக்கும் சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழகங்களில் 2 பல்கலைக்கழகங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்.

ஏழை மாணவர்களும் நடுத்தர மாணவர்களும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தான் படிக்க முடியும். ஆனால் அரசுகள் அதிகம் செலவு செய்வதில்லை. மாணவர் சேர்க்கையையும் அதிகப்படுத்துவது இல்லை.
இந்தியாவில் பள்ளி கல்வி அலுவல் நேரம் 6 மணி நேரமாக உள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட மற்ற நாடுகளில் 8.5 மணி முதல் 9.5 மணி வரை உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் 12 முதல் 14 மணி நேரமாக உள்ளது. பள்ளிக்கல்வியில் இருக்கிற 6 மணி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.

அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டும். அதற்கு பிறகு உலக நாடுகளோடு போட்டி போட வேண்டும்.
ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் கல்வியைப் பெற அரசுகள் அதிக நிதியை ஒதுக்கி செலவழிக்க வேண்டும்.
உயரகல்வியில் மாணவர்களுக்கு தனி நபர் செலவினம் என்பது ஓ.இ.சி.டி. நாடுகளில் 15000 முதல் 20000 டாலர்கள் வரை உள்ளன. சீனா 17,700 டாலர்களை வரை செலவழிக்கிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 760 டாலர்களை செலவழிக்கிறது.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் சீனா 70 சதவீதத்தில் உள்ளது. இந்தியா 28 சதவீதத்தில் பின்தங்கி உள்ளது. கல்வி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி வராது.
இவ்வாறு அவர் பேசினார்.

கோஸ்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன் ஜி மேனன் பேசும்போது,

“கல்வி தான் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். சமுதாயம், நாடு மேம்பட கல்வி முக்கியமாகும். மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சமூக பொறுப்புணர்வு வேண்டும். சமூகத்திற்கு திரும்ப வழங்க வேண்டும்” என்றார்.

நிகழ்வில் அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு, செயலாளர் ஜே.லட்சுமணன், பொருளாளர் கே ஜவரிலால் ஜெயின் மற்றும் நிதிக்குழு தலைவர் எம். வெங்கடசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை உதவி திட்ட இயக்குநர் ப.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் படிக்க