March 14, 2018
தண்டோரா குழு
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அண்மைக்காலமாக எலுமிச்சை செடிகளில் பின்நோக்கி வாடல் மற்றும் இலைகள் மஞ்சளாகி உதிரும் அறிகுறிகள் தோன்றி வருகின்றன.
இவ்வகையான செடிகளில் பூக்கள் பூத்து மிக சிறிய காய்கள் காய்த்து அவையும் உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட செடிகளை ஆய்வு செய்ததில், வேர்களில் சிறிதும் பெரிதுமான முடிச்சுகள் காணப்பட்டன. இம்முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் பெண் நுற்புழுக்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் மிலாய்டோகைன் இண்டிகா எனும் தனியினம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முறையாகக் கண்டறியப்பட்ட இந்த வேர்முடிச்சு நுற்புழுத் தனியினம் பாலாஜி என்னும் எலுமிச்சை இரகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாற்றுகளில் இருந்தே இந்த புதிய ரக புழுக்கள் தமிழ்நாட்டில் பரவக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனவே, உழவர் பெருமக்கள் தங்கள் எலுமிச்சைத் தோட்டங்களில் உள்ள எலுமிச்சை மரத்தின் வேர் மற்றும் மண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி நுற்புழுத்தாக்கம் உள்ளதா என அறிந்து அதற்கேற்ற வழிமுறைகளைக் கையாளவும்.
இத்தகவலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் கி. பூர்ணிமா மற்றும் துறைத்தலைவர் முனைவர். ச. சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுற்புழுவியல் துறையை அணுகவும்.தொடர்புத் தொலைபேசி எண். 0422-6611264.