August 22, 2019 தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்- 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஒரு போட்டியாளராக மதுமிதா பங்கேற்றார். ஆனால், கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில் மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக காட்டப்பட்டது. அப்போது நிகழ்ச்சி மேடையில் தோன்றிய மதுமிதா கையில் கட்டுடன் காணப்பட்டார்.
மதுமிதா வெளியேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் கூறிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.
இதற்கிடையில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தது. அதில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகை மதுமிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர்,
நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். பிக் பாஸ் வீட்டைவிட்டு நான் வெளியேறியதிலிருந்து நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய்யான புகாரை கொடுத்துள்ளது. இப்போது இதுகுறித்து விளக்கம் கேட்க அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தும் விஜய் டிவி நிர்வாகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. என்னை கேள்விகள் கேட்பதை விட தொலைக்காட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கும். எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை என்று மதுமிதா கூறியுள்ளார்.