April 11, 2018
தண்டோரா குழு
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டு தனது தற்கொலைக்கு பிரதமர் மோடி அரசே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ரஜூர்வாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஷங்கர் பாவ்ராவ் சாய்ரே.இவர் 9 ஏக்கரில் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி பருத்தி பயிரிட்டிருந்தார்.ஆனால், பூச்சி பாதிப்பின் காரணமாக பயிர் வீணானதால்,கடன் தள்ளுபடிக்காக காத்திருந்தார்.இவருக்கு 17, 18, 19 வயதில் 3 மகள்களும் ஆகாஷ் என்ற 14 வயது மகனும் உள்ளனர்.அவர்கள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமலும்,கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சங்கர்,தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றார்,அப்போது கயிறு அறுந்துவிட்டதால் உயிர் தப்பினார்.பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக அவர் 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார்,அதில் தனது சாவுக்கு மோடி அரசு தான் காரணம் என்று சங்கர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே விவசாயி தற்கொலை குறித்து கேள்விப்பட்ட மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், அவரது 4 பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.