April 11, 2019 தண்டோரா குழு
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் இந்தியக் குடிமகளான எனக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது என அப்போலோ மருத்துவமனை தலைவரின் மகள் ஷோபனா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்துடன், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆந்திரா நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இந்தியாவில் புகழ்பெற்ற அப்போல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகளான ஷோபனா ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் ஒன்றில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக சென்றிருந்தார். வாக்களிப்பதற்கான உரிய ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்றிருந்த அவர், வாக்குச்சாவடிக்கு சென்றதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து வாக்குபதிவு நடைபெறும் வாக்குபதிவு மையத்தில் இருந்து வெளியில் வந்த ஷோபனா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“எனது வாழ்நாளில் இந்தியக் குடிமகளாக இது மோசமான நாளாகும். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக நான் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளேன். நான் இந்தியக் குடிமகள். எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியம் இல்லையா. இந்தியக் குடிமகளான எனக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது. இதற்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் எனது வாக்கைப் பதிவு செய்திருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.