December 11, 2018 தண்டோரா குழு
எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். பாஜகவின் இந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. அதேபோல தெலுங்கான மாநிலத்தில் தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி பெரும்பான்மையை நோக்கி முன்னேறுகிறது.
இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
“தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சில தொகுதிகள் மட்டுமே வித்தியாசம். நாங்கள் வெற்றி பெறுவோம்.
பா.ஜ.க. வெற்றி பெற்ற போது வாக்குப் பதிவு எந்திரத்தின் மீது குறைகூறிய காங்கிரஸ் கட்சியினர் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில சூழலுக்கேற்ப தற்போது வாக்களித்துள்ள மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் மோடியைத்தான் பிரதமராக தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.
நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்கவும் மாட்டோம், தோல்வியடைந்தாலும் துவள மாட்டோம். எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி.
இதைவைத்து மோடி அலை ஓய்ந்துவிட்டது எனக் கூறுவது ஏற்க்க முடியாது. மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலைக்கு நிகரான பெரிய தலை எந்தக்கட்சியிலும் கிடையாது எனக்கூறினார்.