• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு – ஸ்டாலின்

January 3, 2020 தண்டோரா குழு

எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி
ல்,

“நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும். எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கின்றன. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கொண்டுள்ள விருப்பமும், ஆளும்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே, அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். மக்களைச் சந்திக்கப் பயந்து தயங்கிய அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது. மக்களைச் சந்திக்க ஒரு பக்கம் பயம் என்றால், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான திமுக பிரதிநிதிகள் வந்து விட்டால் தங்களது அநியாய – அன்றாடக் கொள்ளைகளைத் தொடர முடியாது என்ற நினைப்பு இன்னொரு பக்கம்; இந்த இரண்டு காரணங்களால்தான் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அதுவும் முறைப்படி நடத்த வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்குகளைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள், உத்தரவுகள் காரணமாகத்தான், இப்போது இந்தத் தேர்தலை நடத்தியுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்தது. இதனை ஆளும்கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தேர்தல் ஆணையத்தின் துணையோடு, திமுகவின் வெற்றியைத் தடுக்கச் சதி செய்தார்கள். திமுகவின் வெற்றியை அறிவிக்கத் தயங்கினார்கள். மறைக்கத் திட்டமிட்டார்கள். சொல்லப் போனால், திமுக வெற்றி பெற்ற இடங்களையே அதிமுக வெற்றி பெற்ற இடங்களாக மாற்றி அறிவிக்கவும் செய்தார்கள்.

நேற்றைய தினம் மதியம் 2 மணிக்கு மாநிலத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து முறையிட்டேன். ‘சேலம் மாவட்டத்திலேயே திமுக வெற்றி பெறுகிறது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் தயங்குகிறீர்களா? இந்தச் சதிச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்திலேயே உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மாலையிலாவது நிலைமை மாறிவிடும் என்று பார்த்தால் மாறவில்லை. எனவே நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் சென்று ஆணையரைச் சந்தித்தேன். அப்போதும் அவர்களது செயல்பாட்டில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆளும்கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதுடன், திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உள்ளாட்சியில் நடந்து வரும் ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள். மக்கள் நலத்திட்டங்களை உண்மையாகவும், முழுமையாகவும் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களாக மாற்றுவார்கள்’ என்று உறுதி அளிக்கிறேன். இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க