December 17, 2018
தண்டோரா குழு
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யபட்டது.
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் முத்தலாக் அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஆர்பிஐ விவகாரம், மேகதாது அணை, பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் குறித்து ராகுல் கூறிய கருத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பா.ஜ., காங்., அதிமுக, திரிணாமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் முடங்கிப்போன முத்தலாக் மசோதாவின் புதுவடிவத்தை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். முத்தலாக் முறையை மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களவையில் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால் தான் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்ததாக ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
எனினும், கடும் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, ராஜ்யசபையில் முத்தலாக் மசோதா முடங்கிப் போனாலும், சில திருத்தங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அவசர சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.