August 7, 2019 தண்டோரா குழு
எங்கள் உயிரை கொடுத்தேனும், தாய் மண்ணை, தாய் மொழியை, ஒட்டுமொத்த இந்த நாட்டை காப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கருணாநிதியின் சிலை திறப்பு விழா கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடக் கழக தலைவர் வீரமணி, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார்.
பின்னர் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கருணாநிதியை யாரும் மறந்துவிட முடியாது, காரணம் அவரது செயல்பாடுகள்.கருணாநிதி தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர். கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர். அவர் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்.தமிழ் மக்கள் எப்போதும் தைரியமானவர்கள்.அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். ஸ்டாலின் என்ற பெயரிலேயே புரட்சி இருக்கிறது.கருணாநிதி மறைந்தாலும் இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார். பல்வேறு திட்டங்கள், நலப்பணியால் கலைஞர் என்றும் நினைவில் இருப்பார்.எந்த முடிவெடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு, உரிமை உண்டு, அந்த உரிமைக்காக நாம் போராடுவோம். நானும் இந்தியர் தான், ஸ்டாலினும் இந்தியர் தான், அதனால் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது.
பாசிசம்,சர்வாதிகாரம், அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறோம்.எங்கள் உயிரை கொடுத்தேனும், தாய் மண்ணை,தாய் மொழியை,ஒட்டுமொத்த இந்த நாட்டை காப்போம். எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன்,தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.தமிழில் வணக்கம் என்ற வார்த்தையை கூறுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் – ’அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறி உரையை நிறைவு செய்தார் மம்தா பானர்ஜி.