October 5, 2018
ஊழல் எதிர்ப்பை விஜய் உறுதிப்படுத்தினால் அவர் தமது சகோதர மனப்பான்மை கொண்டவர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்ககளை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான மனுவை மூவர் குழுவிடம் அளிக்கவுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை ஒப்புதல் அளிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள்தானே ஒழிய, எங்கோ உட்கார்ந்து கொண்டு சில அதிகாரிகள் கோப்புகளை நகர்த்துவது ஒப்புதல் ஆகி விடாது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை குறித்த கேள்விக்கு “அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றில்லை, அது அவர்களது கடமை” என தெரிவித்துள்ளார்.
மேலும், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “விஜய் தம்பிக்கு விருப்பம் இருந்தால் அவர் அரசியலுக்கு வரலாம். அவர் ஊழல் ஒழிப்பை கொள்கையாக கொண்டு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தினால் அவர் தமது சகோதர மனப்பான்மை கொண்டவர் என்றும்
அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.