May 7, 2021
தண்டோரா குழு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதனால் கோவை உள்ள கடைவீதிகளில் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அதனை தடுக்க நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவீதம் பயணிகளுடன் இயக்கப்பட வேண்டும். மளிகைகள், பல சரக்குக் கடைகள், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவையில் நேற்று பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், கோவை ரங்கே கவுடர் வீதி, டவுன்ஹால் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பலசரக்குக் கடைகளில் காலை நேரங்களில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் சந்தைகள், காய்கறி, இறைச்சிக் கடைகளிலும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு பிறகு காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் மூடப்பட்டதால், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடிசாலை, உக்கடம் மீன் சந்தைகள், டவுன்ஹால், ரங்கே கவுடர் வீதி, பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதிகளில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக பூமார்க்கெட் 20ம் தேதி வரை முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டதால், அங்கு பூக்கடைகள் காலை முதலே திறக்கப்படவில்லை.