January 24, 2019 தண்டோரா குழு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான்காட்சி என திமு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருநாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவித்திருந்தார். இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான்காட்சி என திமு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை. முதல் மாநாடு போடப்பட்டதில் இருந்து முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர். அந்நிய முதலீடு குறைந்து முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு வரவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகத்திற்கு வந்தது 0.79 சதவீதம் மட்டுமே. என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.