June 27, 2018
தண்டோரா குழு
உலக கோப்பை கால்பந்து போட்டியில்,பந்தை எடுத்து கொடுப்பதற்காக தேர்வாகி ரஷ்யா சென்று வந்த கோத்தகிரியை சேர்ந்த மாணவிக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோத்தகிரியை சேர்ந்த பள்ளி மாணவி லதான்யா ஜான் என்பவர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்கத்தின் போது பந்தை கால்பந்து வீரர்களுக்கு எடுத்து கொடுக்கும் நிகழ்விற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.குறிப்பாக 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் இருந்து இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வாகி இருந்தனர்.
இந்த தேர்வானது பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.அதில் கோத்தகிரியை சேர்ந்த லதான்யாவும் ஒருவர்.பின்னர் அவர் பிரேசில் அணி விளையாடிய போட்டியின் துவக்கத்தில் பந்தை எடுத்து கொடுத்து போட்டியை துவக்கி வைத்தார்.இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு கெளரவத்தை ஏற்படுத்திய லதான்யாவிற்கு கோவையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.தமிழகத்தை சேர்ந்த மாணவி உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக இருந்தது பெருமையளிப்பதாக லதான்யா தெரிவித்தார்.