June 30, 2018
தண்டோரா குழு
உலக அழகிக்கான கிரீடத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுப்பதே எனது லட்சியம் என மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் அண்மையில் மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றார். இந்நிலையில், சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அனுகீர்த்தி வாஸ் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அழகி போட்டி குறித்து தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இருந்தால், மிஸ் இந்தியா மட்டுமின்றி உலக அழகியாகவும் தமிழ் பெண்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சி. தற்போது உலக அழகிப் போட்டிக்கு தயாராகி வருகிறேன், அதற்காக கவனம் செலுத்தி வருகிறேன். உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் நான் பங்கேற்க உள்ளேன். உலக அழகிக்கான கிரீடத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுப்பதே எனது லட்சியம்.
தனி ஒருவராக இருந்து என்னுடைய அம்மா என்னை தைரியமான பெண்ணாக வளர்த்ததே நான் வெற்றி பெற்றதற்கு காரணம். என்னால் முடிந்தவறை அனைத்து துறையிலும் சிறந்தவராக மாற்றி வருகிறேன். 6 மணிக்கு வீட்டுக்கு வா, இந்த உடைதான் அணிய வேண்டும் என கட்டுப்பாட்டுடன் என்னை வளர்த்து இருந்தால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. எனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்த எனது தாயாருக்கு நன்றி. அம்மா என்னை தைரியமான பெண்ணாக வளர்த்தார். வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதி நிதியாக பங்கேற்பதில் பெருமை தருகிறது.
என்னுடைய உடை குறித்தும், அலங்காரம் குறித்தும் விமர்சித்த என் பாட்டி நான் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலக அழகிப் போட்டியில் வெல்வோர் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். தமிழ் மொழியை கற்பது கடினம், பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். தமிழ் கலாசாரம், அருமை தெரிந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும் எனக் கூறினார்.