December 29, 2018 தண்டோரா குழு
சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சமவேலைக்கு சமஊதியம் என்றகோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளனர். கடும் குளிரிலும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களுடன் இரவு, பகலாக தண்ணீர் மட்டும் குடித்து போராடி வருகின்றனர். இரவு நேரங்களில் கொசுத் தொல்லையுடன், குளிரும் வாட்டும் நிலையில் வெறும் தரையில் படுத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமானதால் சம்பவ இடத்தில் போலீஸாரும், மருத்துவக்குழுவினரும் தயாராக உள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைபவர்களுக்கு அங்குள்ள முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தேவையான கழிவறை வசதிகள் செய்துதரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுவரை உடல்நலக்குறைவால் 200க்கும் அதிகமானஆசிரியர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்துள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.