August 13, 2021
தண்டோரா குழு
உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பாக உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்களை கவுரபடுத்தும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பாக உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களை மரியாதை செய்து கவுரபடுத்தும் நிகழ்வு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.வாழ்விற்கு பிறகும் வாழ்க்கை எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி தலைமை வகித்தார்.
டீன் டாக்டர் குமரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா,சுகாதாரதுறை இணை இயக்குனர் டாக்டர் சந்திராஆகியோர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர்களை மரியாதை செலுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கி கவுரபடுத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன்,
உறுப்பு தானம் செய்வது என்பது ஒரு தியாகச்செயல் என குறிப்பிட்ட அவர்,உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்து,பிறருக்கு வாழ்வளித்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என உடல் உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி,
பிறருக்கு தானமாக அளிக்கப்படும் கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியவற்றுக்கு விலையே நிர்ணயிக்க முடியாது எனவும்,உறுப்பு தானம் செய்யப்படும்போது கொடையாளிகள் காலங்காலமாக மற்றவர்களின் உடலில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். உலகத்திலேயே உன்னதமான,உறுப்பு தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினரை கவுரபடுத்துவதில் எங்களது மருத்துவமனை பெருமை கொள்வதாக பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களின் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.