July 5, 2018
தண்டோரா குழு
துணை நிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு தான் பொருந்தும்; புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும்,புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது.ஆனால்,இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி,டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையில்,டில்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் என டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து,டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது அரசுக்குத் தான் அதிகாரம் என தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து,இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பை மீறும் வகையில் கிரண் பேடி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.எனினும்,இது குறித்து கவர்னர் கிரண்பேடி நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்,இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி,
நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வாசித்து காட்டினார்.அதன்படி புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது.புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது.எனவே,இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.இதனை வாசித்து காட்டிய கிரண்பேடி டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.