June 16, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், புனரமைக்கப்பட்டு வரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை மாநகராட்சி கமிஷனர்
ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட உக்கடம் பெரியகுளத்தினையும்,ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செல்வசிந்தாமணி குளத்தினையும், ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார்.
அப்போது, குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள்,சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய நிழல் இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மத்திய மண்டலம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் களப்பணியாளர்களிடம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதன் நேரடி செயல்விளக்கத்தை கேட்டறிந்தார். பின்னர் களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் (மத்தியம்) சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.