December 28, 2018 தண்டோரா குழு
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தின் மீது நில அபகரிப்பு, வனப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுதல், சமூக ஆர்வலர் ராஜேஷ்குமாரின் மர்ம மரணத்தில் தொடர்பு என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் பேஸ்புக் மூலமாக பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பியூஷ் மீது ஈஷா யோக மையம் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில் பியூஷ் மானூஷ் இன்று கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கை வருகிற பிப்ரவரி 1 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ்,
தன் மீது வழக்கு போட்டுள்ள ஈஷா மையம் வனப்பகுதியில் யானை வாழ்விடத்தில் கட்டிடங்கள் கட்டியுள்ளதை ஒப்புக்கொண்டு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய ஈஷா தரப்பு வழக்கறிஞர் மகேஷ்குமார்
ஈஷா குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்கிற நோக்கில் பியூஷ் பதிவிட்டுள்ளதால் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பியூஷிற்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளது. ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்த ரேளி பார் ரிவ்ர்ஸ் பேரணி மூலம் ஆறுகளின் கரைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.