February 7, 2019 தண்டோரா குழு
இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசியிருக்க தேவையில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திமுகவுடன் கூட்டணி கிடையாது என்ற தகவல் உண்மைதான். மக்களுக்கு நல்லதை பறிமாற முட்பட்டு இருக்கும் போது ,கையை சுத்தமாக வைத்திருக்கின்றோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அதிமுகவை தனியாக சொல்லவில்லை என எண்ண வேண்டாம், ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சியை எதிர்த்து வருகிறோம். அதிமுகவிடனும் கூட்டணி கிடையாது. அமமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு , கை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த கேள்விக்கு இடமில்லை. அமமுகவுடனும் கூட்டணி கிடையாது என சூசகமாக தெரிவித்தார்.
எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் எண்ணம். எங்கள் கை கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். ரஜினி தனது இல்ல கல்யாணத்திற்கு அழைக்க அரசியல் கட்சியினரை அழைக்க போயிருக்கின்றார். இந்து திருமண முறையை பற்றி திமுகவினர் பேசுவது புதிதாக செய்வதல்ல அது எனக்கு பேரதிர்ச்சியையும் தரவில்லை. அது அவர்கள் கருத்து.இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசியிருக்க தேவையில்லை என்பது என் கருத்து எனவும் தெரிவித்தார்.