March 20, 2019 தண்டோரா குழு
இவ்வளவு அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காகப் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதையடுத்து, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர், அவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ”தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீர்கள். நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் சொல்கிறேன்” என்றார்.
அப்போது உதயநிதியின் பேச்சைக் கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், சிரித்துக்கொண்டே கீழே குனிந்துகொண்டார். தற்போது, இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.