January 31, 2019 தண்டோரா குழு
இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது.அதற்காக சென்னை நந்தனம் மைதானத்தில் மாபெரும் நிகழ்ச்யை ஏற்பாடு செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
இந்த நிகழ்விற்கு பல்வேறு இசைக்கலைஞர்கள், திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இசைஞானியை கௌரவிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை கடந்த சில தினங்களுக்கு முன்பாக இளையராஜா துவங்கி வைத்தார்.
இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில்,ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல திரை பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர். நடிகர் யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, கார்த்திக்-ராதா ஆகியோரின் காமெடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஜய் யேசுதாஸ், எஸ்.எஸ்.தமன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் ஆகியோர் இளையராஜாவின் சில பாடல்களை பாடுகின்றனர்.தொடர்ந்து நடிகைகள் இனியா, சுனைனா, மஞ்சிமா மோகன், முன்னா, நிக்கி கல்ராணி, சாயிஷா, வேதிகா, இனியா, நடன இயக்குனர் தினேஷ், டேனி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 3 ஆம் தேதி நிகழ்ச்சியில் வெளிமாநிலங்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கின்றனர்.அப்போது இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்காக, ஹங்கேரியில் இருந்து சிம்பொனி இசைக்குழு சென்னை வந்துள்ளது.
வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை கலைகட்டியுள்ளது.