January 28, 2019 தண்டோரா குழு
இளையராஜா பாராட்டு விழாவுக்கு செய்த செலவு எவ்வளவு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ’இளையராஜா 75’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்தது. இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பகுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இதற்கு வரும் 28ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு, உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு என்றும் நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு கணக்கு குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக் கல் செய்ய வேண்டும். நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு முடியும் வரை இந்த நிகழ்ச்சி யை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது.