• Download mobile app
28 May 2026, ThursdayEdition - 3760
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் வயதினரையும் தாக்கும் மூட்டுத் தேய்மானம்: ரோபோட்டிக் சிகிச்சையில் புதிய நம்பிக்கை – கே.எம்.சி.எச் மருத்துவர் தகவல்

May 28, 2026 தண்டோரா குழு

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் “மூட்டுவலி விழிப்புணர்வு மாதம்” ஆக அனுசரிக்கப்படும் நிலையில், தற்போது இளம் வயதினரிடமும் மூட்டுத் தேய்மான பாதிப்பு அதிகரித்து வருவதாக கே.எம்.சி.எச் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தென்னவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“முன்பு மூட்டுத் தேய்மானம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு குறைவு காரணமாக இளம் வயதினருக்கும் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது,” என்றார்.

மூட்டுத் தேய்மானம் காரணமாக நடப்பதில் சிரமம், முழங்கால் வலி, மூட்டு இறுக்கம், காலை மடக்கி நீட்ட முடியாமை, வீக்கம் மற்றும் கால் வளைந்து போதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், மரபணு காரணங்கள், விபத்துகள், சிகிச்சை பெறாத காயங்கள், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்ற காரணங்களாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் உடற்பயிற்சி, பிசியோதெரபி, உணவுமுறை மாற்றம் போன்ற எளிய சிகிச்சைகள் மூலம் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.ஆனால் பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருவதால், அப்போது மருந்துகள் மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் பலன் தராமல் போகும் சூழல் உருவாகிறது. இதனால் சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக அமைகிறது என்றார்.

கோவையில் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கே.எம்.சி.எச் மருத்துவமனை என்றும், இந்த சிகிச்சையின் மூலம் குறைந்த காயத்துடன் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவி மூலம் 1750-க்கும் மேற்பட்ட துல்லியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த ரோபோட்டிக் முறையில் குறைந்த வலி, குறைந்த வீக்கம் மற்றும் விரைவான குணமடைதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் விளக்கினார்.

“மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தற்போது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதான சிகிச்சையாக மாறியுள்ளது. சிகிச்சைக்கு வந்த மூன்றாவது நாளிலேயே நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது,” என்றும் மருத்துவர் தென்னவன் தெரிவித்தார்.

மூட்டுத் தேய்மானத்தைத் தவிர்க்க உடல் எடையை கட்டுப்படுத்துதல், தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், சத்தான உணவுகள் உட்கொள்ளுதல், வைட்டமின் டி சத்து பெற வெயிலில் நடப்பது போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் தகவல்கள் மற்றும் முன்பதிவிற்கு: 75488 55512.

மேலும் படிக்க