December 15, 2021
தண்டோரா குழு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் தன்னார்வலர்களாக 500 கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்து பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் 9 கலைக் குழுக்கள் மூலம், 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போது வரை 500 கல்லூரி மாணவ-மாணவிகள் தன்னார்வலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் 2089 குடியிருப்புகளில், 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அதனால் 8,200 தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது வரை 6,471 பேர் பதிவு செய்துள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்த மாவட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செல்போன் செயலி மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.