January 29, 2019 தண்டோரா குழு
இலங்கை கடற்ப்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை ஊர்க்காவல் நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது.
இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் இன்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.