January 17, 2019 தண்டோரா குழு
ஒடிசாவில் சாதிக்கொடுமையால் தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் மகனே எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா கண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா(42) கணவர் இறந்த பின் தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி சின்ஹானியா தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.
தாயின் மரணத்தால் நிலைகுலைந்து போன சரோஜ் அவருக்கு இறுதி சடங்கு செய்ய அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.ஆனால் அவர் பட்டியலினத்தவர் என்பதை காரணம் காட்டி அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. எனினும், மனம் தளராத சரோஜ் தனி ஆளாக நின்று இறுதி சடங்கு செய்ய தீர்மானித்தார்.
தாயின் உடலை துணியால் மூடி பேலன்ஸ் செய்வதற்காக இரண்டு கம்புகளை வைத்து அவர் சைக்கிளின் பின்புறம் வைத்து தாயின் உடலை தனி ஆளாக தன் தலையில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று இறுதிசடங்கு செய்தார்.போகிற வழியில் சைக்கிளில் இருப்பது என்ன என்று கேட்டவர்களுக்கு தனது தாய் மரணமடைந்ததை பரிதாபமாக கூறிய போதும் அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. பிறகு யார் உதவியும் இன்றி தனியாளாக காட்டுக்குள் அவரை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். தலைவிரித்தாடும் சாதிக் கொடுமையால், தாயை இழந்த சிறுவனுக்கு ஒருவரும் உதவ முன்வராதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.