November 8, 2018 தண்டோரா குழு
மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவரின் உடலை உறவினா்களிடம் ஒப்படைக்க பட்டாசுகளை லஞ்சமாக பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது. உடற்கூறு ஆய்வு முடிந்த பின்பு அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் வந்தனர். அப்போது உடலை பெறுவதற்கு வந்த உறவினரிடம் மருத்துவமனை ஊழியா் ஒருவா் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், லஞ்சத்தை பணமாக கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக பட்டாசுகளை வாங்கித்தருமாறு ஊழியா் கேட்டுள்ளார்.
ராஜேந்திரன் இறந்த மனவேதனையில் இருந்த உறவினர்கள் வேறு வழியின்றி ரூ.1,500 மதிப்பில் பட்டாசுகளை வங்கி கொடுத்துவிட்டு உடலை பெற்று கொண்டனர். இதற்கிடையில், பட்டாசுகளை கொடுத்துவிட்டு உடலை பெறும் காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.