May 27, 2021
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்தில் இன்று காலையில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பந்தமாக இந்து முன்னணி பிரமுகர் சூர்யாவை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என இஸ்லாமிய இயக்கத்தினர் மற்றும் கட்சியினர் கோவை மாநகர கமிஷ்னரிடம் மனு அளித்தனர்.
கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை இந்து முன்னணி பிரமுகர் சூர்யா என்பவர் சக கால்டாக்சி ஓட்டுநர் ஆன பைசல் என்பவரை கத்தியால் குத்திய விஷயம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்து முன்னணியைச் சேர்ந்த சூர்யா என்பவர் மீது பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளும், பல்வேறு வழக்குகளும் விசாரணையில்உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் , உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டியும் கோவை இஸ்லாமிய இயக்கத்தினர் மற்றும் கட்சியினர் மாநகர கமிஷனர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல தலைவர் அன்வர் உசேன் ,எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் ராஜா உசேன் ,தமுமுக மாவட்ட தலைவர் கபீர் அஹமது ,பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல குழு உறுப்பினர் அப்துல் ஹக்கீம் ,மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ஆகியோர் கலந்து கொண்டனர்.