November 11, 2019
யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரியை சந்தித்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவது சம்மந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளால் இனி யாருக்கும் எவ்வித பாதிப்பும் நேராமல் இருப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க தொடங்கியுள்ளது. அதைபோல் பல்வேறு சமூக அமைப்பினரும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர களத்தில் இறங்கியுள்ளது யங் இந்தியன்ஸ் பவுண்டேசன். இதுமட்டுமின்றி 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம் எனவும், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ருபாய் சன்மானம் வழங்கப்படும் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவ்வமைப்பின் செயலாளர் விஷ்ணுபிரபு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரியை சந்தித்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் இலவசமாக மூடி தருவது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவ்வமைப்பின் செயலாளர் விஷ்ணுபிரபு கூறுகையில்,
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து எங்கள் யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் விளக்கினோம். அப்போது, மகாராஸ்டிரா மாநிலத்திலும் எங்கள் அமைப்பு சார்பில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூட உள்ளதாக கூறினோம். அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார், மேலும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க உத்திரவிட்டார்.
எங்கள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் இதுவரை 15 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடியுள்ளோம். இந்தியா முழுவதும் இதுபோன்ற பயன்பாடற்ற ஆழ்துளை மூட எங்கள் அமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. மகாராஸ்டிராவை தொடர்ந்து அடுத்ததாக உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.
நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் உயிரிழப்பே இறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்து வருகிறோம் என்றார்.