February 20, 2019
தண்டோரா குழு
இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு காவல் துறையில் ரோபோ ஒன்றை பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் KP-BOT எனப்படும் ரோபோக்களின் பணியை துவக்கி வைத்தார். இதன் மூலம் காவல் துறையில் ரோபோக்களை இயக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது.
இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கினார். மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
நான்கு பேர் செய்யக் கூடிய பணியை இந்த ரோபோ தனியாக சமாளிக்கும் திறன் கொண்டது. புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்த KP-BOT வகை ரோபோ செய்து முடிக்கும் திறன் கொண்டது.