May 23, 2019 தண்டோரா குழு
வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டமாக நடந்தது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக 340 இடங்களில் முன்னணியில் உள்ளது.
இதற்கிடையில், 20 மக்களவை தொகுதிகள் கொண்ட கேரளாவில் கடந்த ஏப்ரல் 23-ஆம் நாள் மக்களவை தேர்தல் நடைப்பெற்றது. இங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிட்டார். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனிலை சுமார் 8 லட்சம் வித்தியாசத்தில் தோற்கடித்து ராகுல் காந்தி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை ராகுல்காந்தி பெற்றுள்ளார்.
இதற்கு முன் பாஜகவை சேர்ந்த பிரீதம் முண்டே 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.