July 6, 2018
தண்டோரா குழு
ஆவணபட இயக்குநர் திவ்யபாரதியை ஜூலை 16 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை தொடரும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த திவ்யபாரதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அதில்,”கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண குறும்படங்களை இயக்கியுள்ளேன்.தற்போது ஒகி புயல் பற்றிய “ஒருத்தரும் வரலை” என்ற ஆவணபடம் எடுத்து வருகிறேன்.இதன் டீசரை வெளியிட்டுள்ள நிலையில் எனது வீட்டிற்கு போலீசார் வந்து துன்புறுத்துகின்றனர்.
படம் சம்பந்தமாக ஆவணங்களை கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள்.என்னை தேச துரோக வழக்கில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள்.எனவே என்னை போலீசார் கைது செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் திவ்யபாரதி மீது நீலகிரி,கூடலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டுள்ளது என கூறப்பட்டது.இதனையடுத்து திவ்யபாரதியை ஜூலை 16 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை தொடரும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீலகிரி மற்றும் கூடலூர் காவல்நிலையங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகார வரம்பிற்குள் வராது,எனவே மனுதாரர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றதை அனுகலாம் என கூறினார்.