December 26, 2018
தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கடந்த 18-ம் தேதி ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைச் செயலாளர் சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக ஆளுநர் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஜனவரி 2-ஆம் தேதி கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அன்று மாலை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும் என்றும் பின்னர் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.