April 7, 2021
தண்டோரா குழு
கோவை – வடகோவை இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2 கோவை ரயில்கள், 5 நாள்களுக்கு கோவை ரயில் நிலையம் செல்லாமல், இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை – வடகோவை ரயில் நிலையம் இடையே பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 8, 10,12,14,17ம் தேதிகளில் ஆலப்புலா – தன்பாத் சிறப்பு ரயில் மற்றும் எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 2 ரயில்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளன.
இதனால், பீளமேடு, சிங்காநல்லூர் நிலையங்கள் வழியாக இந்த நாள்களில் இயக்கப்படாது.இந்த ரயில்களில் பயணிக்க, பயணிகள் இருகூர் அல்லது போத்தனூர் நிலையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.