March 14, 2018
தண்டோரா குழு
தனியார் தொலைக்காட்சி நடத்தும் மணப்பெண் தேடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஆர்யா தங்கி இருந்த ஓட்டலை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிதாக துவங்கப்பட்டுள்ள தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா தனது மணப்பெண்ணை தேடும் நிகழ்ச்சி ‘எங்கள் வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தனது மணப்பெண்ணாக தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் ஆர்யா கும்பகோணம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.
இதற்கிடையில், ஆர்யா தங்கியிருக்கும் தகவல் அறிந்த கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் அந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நடிகர் ஆர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கும்பகோணம் கிழக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து நடிகர் ஆர்யா, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக போலீஸ் பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு சென்றார்.