December 23, 2019
ஆயுர் வேத சிகிச்சைக்கு கோவை வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் யுயிஷாரோ ஹீடோ (57) இவர் வழக்கமாக கோவை திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியிலுள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்து இங்கேயே தங்கி சிகிச்சை பெற்று சென்று வந்தார். இதே கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த அவர் கடந்த 20 ஆம் தேதி கோவை ரொட்டிகவுண்டனூர் தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடிரென யுயிஷாரோ மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலமாக கோவை ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவினர்கள் இந்தியா வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்பதால் அவரது உடலை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். உறவினர்கள் வந்த பிறகே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.