July 27, 2020
தண்டோரா குழு
வாழும் கலை அமைப்பின் சார்பில் அதன் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில் ‘ஆன்-லைன்’ மூலம் நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்றனர். இதில் கோவையில் உள்ள வாழும் கலை அமைப்பினர் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் வீடுகளில் இருந்து கந்த சஷ்டி கவசம் பாடினார்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்கள் மூலம் ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சஷ்டி பாராயணம், முதலில், கடந்த ஆண்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ., 15ல் நடந்த பாராயணத்தில், 30 லட்சம் பேர் நேரலையில் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில், இந்த கந்த சஷ்டி பாராயணம் நேற்று மாலை பெங்களுரிவில் இருந்து நடைபெற்றது.
பாராயணத்தை துவக்கி வைத்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது,
கந்தசஷ்டி பாராயணம் எதற்கு என்றால், மனதில் உள்ள பயம் நீங்க, ஆத்ம பலம் கொடுப்பதற்கு. மனிதன் நோயின்றி நிம்மதியாக வாழ, முருகப் பெருமானை வணங்கி, கந்தர் சஷ்டி கவசம் பாட வேண்டும். பரம்பரை எங்கும் நிறைந்துள்ள கடவுள், நம் ஒவ்வொரு அங்கத்தையும் காப்பாற்ற வேண்டிக் கொள்வதே கவசம். சிவ கவசம், தேவி கவசம் போல, கந்தர் சஷ்டி கவச பாராயணம், பரம்பரை பரம்பரையாக வந்து உள்ளது. இறைபக்தி உள்ளவர், இல்லாதவர்கள் என பாகுபாடு இன்றி,அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என,முருகனை மனமுருக வேண்டி பாராயணம் செய்வோம். மோரை கடைந்தால், அதில் மறைந்துள்ள வெண்ணெய் வெளி வருவது போல, கந்தர் சஷ்டி பாராயணம் செய்வதால், அன்பும், தைரியமும் வெளிப்படும்.
முருகப் பெருமான் ஞான சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வானை கிரியா சக்தியாகவும் விளங்குகின்றனர். தமிழக மாவட்டங்களில் உள்ள பக்தர்கள், இலங்கை, மலேஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த பாராயணம் மூலம், நாட்டிற்கு வந்துள்ள நோய் விலகவும், மனிதர்கள் வளமாகவும், சந்தோஷமாகவும் வாழ பிரார்த்திப்போம்.
இவ்வாறு, அவர் பேசினார்.