December 17, 2018
தண்டோரா குழு
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால், காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு அபாயகரமானது என கூறியிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது. இதற்கிடையில், மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டம், மத்திய அரசின் சட்டம் என்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே இருப்பதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதேபோல்,ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்ட பின் சட்டமாக இயற்றப்படும் என்று மத்திய அரசும் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. வரும் ஜனவரி 31-க்குள் வரைவு விதிமுறைகளை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.