February 13, 2019
தண்டோரா குழு
பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நடப்பு நாடாளுமன்ற நிறைவு நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து எதுவுமே தெரியாமல் ஒரு புதுமுகமாக தான் இங்கு கடந்த 2014-ல் காலடி எடுத்து வைத்தேன். அடுத்த முறை இங்கு மீண்டும் வருவேனா மாட்டேனா என்பது தெரியாது. அது மக்கள் மற்றும் கடவுளின் கையில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவை இது. இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் பலனளித்து வருகிறது. ஐ.நா அவையில் இந்தியாவின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு மதிப்பிற்குரிய அரசு என பெயர் வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிகிறது.
உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயற்கைக்கோள்கள் அதிகளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. வங்கதேசம் – இந்தியா இடையேயான நில பிரச்சினையை தீர்த்துள்ளோம். ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தோம். உலகம் முழுவதிலும் யோகாவை இந்த அரசு பிரபலப்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது. 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது.
வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்க தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. 85 சதவீத மனநிறைவோடு விடை பெறுகிறேன் என்றார்.