January 8, 2019 தண்டோரா குழு
அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில், அலோக் வர்மா, மத்திய அரசு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தரப்பு வாதங்கள் முடிவடைந்து, கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லாத நிலையில்,நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார்.
இந்த தீர்ப்பில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது.அலோக் வர்மா தொடர்ந்து சிபிஐ இயக்குனராக செயல்படுவார், விசாரணை கமிட்டி இறுதிமுடிவு எடுக்கும் வரை அலோக் வர்மா முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலம், மத்திய அரசு சம்பந்தமான எந்த வொரு கொள்கை முடிவுகளையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் மத்திய அரசு தலையிட கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காரணாமக CBI தற்காலிக இயக்குனராக உள்ள நாகேஸ்வரராவ் பதவி கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.