August 24, 2019 தண்டோரா குழு
1952-ம் ஆண்டில் பிறந்த டெல்லிவாசியான அருண் ஜேட்லி, 1973-ம் ஆண்டில் சட்டம் பயின்றார். கல்லூரி பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமான அகில பாரதிய வித்யா பரிஷத்தில் சேர்ந்து, மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராஜ்நாராயணன் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த அருண் ஜேட்லி, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்சரத் யாதவ் முதல் மாதவ்ராவ் சிந்தியா வரை கட்சி பேதமின்றி அனைவருக்காகவும் வழக்குகளில் ஆஜரா கியுள்ளார்.அவசர நிலை பிரகடனத்தின்போது 19 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர். சிறைவாசம் முடிந்ததும் பாஜக-வின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார்.
அதன் பின் அருண் ஜெட்லி, பா.ஜ., வில் 1991ல் இணைந்தார். 1999 நாடாளுமன்ற தேர்தலின் போது, பா.ஜ., செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரானார். 2000ம் ஆண்டு சட்டம், நீதித்துறை மற்றும் நிறுவன விவகார துறை அமைச்சரானார். பின் அமைச்சரவையில் இருந்து விலகிய இவர், 2002 – 2003ல் பா.ஜ., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். 2003ல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரானார். 2009 – 2014ல் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் களமிறங்கினார். பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். சிலகாலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார். இவரது பதவிக்காலத்தில் தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல வரிகளை ஒன்றிணைத்து, ஒரே நாடு ஒரே வரி என்ற வகையில் ஜி.எஸ்.டி., வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களிலும் இவரது செயல்பாடு முக்கிய பங்கு வகித்தது.
2019 தேர்தலில் பாஜக மீண்டும் வென்றபின், தன் உடல்நிலையை காரணம் காட்டி தான் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என தெரிவித்தார்.