November 12, 2019 தண்டோரா குழு
அரிய வகையான இராட்சத சிறுநீரக கேன்சர் கட்டியை நவீன முறையில், கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீரம்மாள், வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் இராட்சத கேன்சர் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். 24 சென்டி மீட்டரும், 2 கிலோ எடையும் இருந்த கட்டி, ரத்த குழாய் வரை பரவி இருந்ததால், அதனை ரீனஆஞ்கியோ எம்பாலிஷேஷன் மூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, கட்டி 8 சென்டி மீட்டராக குறைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற அறுவை சிகிச்சைக்காக 2.5 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரம் சமீபத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். தற்போது வரை கோவை அரசு மருத்துவ மனையில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள், கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.