November 14, 2019
பொள்ளாச்சி அருகே முகாமிட்டிருந்த ஒற்றை யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜா இதுவரை 8 பேரை தாக்கிக் கொன்றுள்ளது.
அத்துடன் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வந்தது. அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை கும்கி யானையைக் கொண்டு பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கும்கி யானை சலீமுடன் யானையைப் பிடிக்கும் பணியில் இறங்கினர்.
அர்த்தநாரிப்பாளையம் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் பல்வேறு திசைகளில் பிரிந்து 3 நாட்கள் இரவு பகலாக காத்திருந்தனர். இதையடுத்து பருத்தியூர் வனப்பகுதி அருகே வனத்துறையினரிடம் சிக்கிய அரிசி ராஜா மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
அரை மயக்கத்தில் இருந்த அரிசி ராஜா, கும்கி யானை சலீமுடன் வர மறுத்து முரண்டுபிடித்தது. ஆனால், கும்கி யானை சலீம் அதனை விடாமல் முட்டி சமதளத்துக்கு இழுத்து, பெரும் போராட்டத்துக்குப் பின் லாரியில் ஏற்றப்பட்டது.